நல்லா படிச்சு வாங்குங்க மார்க்; கரண்ட் கட் இல்லை: மின்சார வாரியம்
நல்லா படிச்சு வாங்குங்க மார்க்; கரண்ட் கட் இல்லை: மின்சார வாரியம்
UPDATED : பிப் 13, 2024 12:00 AM
ADDED : பிப் 13, 2024 09:56 AM
கோவை:
அரசு பொதுத் தேர்வுகள் துவங்கியதை தொடர்ந்து, எதிர் வரும் இரு மாதங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு கூட, மின் நிறுத்தம் இருக்காது என்று, மின்வாரியம் கூறியுள்ளது.நடப்பாண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இதையடுத்து, தமிழ்நாடு மின்சார வாரிய கோவை மண்டலம் மின்பகிர்மான பிரிவு அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு பொதுத்தேர்வுகள் துவங்கி விட்டன. தொடர்ந்து செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வுகள் நடைபெறும். அதுவும் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., என, மூன்று பிரிவுகளில் நடைபெறும்.ஏப்.,8ல் எஸ்.எஸ்.எல்.சி., எழுத்துத்தேர்வுடன் நிறைவு பெறுகிறது. அதுவரை அரசுத்தேர்வு நடைபெறும் பள்ளி இருக்கும் பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, மின்தடை ஏற்படுத்த வேண்டாம்.அப்படி பணி மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தால், பள்ளி முடிந்த பின்போ அல்லது தேர்வு அல்லாத விடுமுறை நாட்களிலோ மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும், அரசுத்தேர்வு நடைபெறும் வேளையில் மின்வெட்டு மற்றும் மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறுகையில், இது போன்ற அறிவிப்புகள் அரசு பொதுத்தேர்வு நடைபெறும் போது மின்வாரியம் சார்பில் வெளியீடு செய்யப்படும் அறிவிப்பு தான்.இருப்பினும் மின்வாரிய அலுவலகங்களுக்கு அரசுபொதுத்தேர்வு நடைபெறும் வரை, எவ்வித மின்வெட்டோ, மின் தடையோ ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.மின்வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள், தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அன்றாடம் மின் வினியோகம் குறித்த அறிக்கையை, மின்வாரிய தலைமை அல்லது மேற்பார்வை பொறியாளர் வசம் அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.