வழக்கு முடியும் வரை நடவடிக்கை வேண்டாம்; ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கோரிக்கை
வழக்கு முடியும் வரை நடவடிக்கை வேண்டாம்; ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கோரிக்கை
UPDATED : பிப் 20, 2024 12:00 AM
ADDED : பிப் 20, 2024 10:14 PM
கோவை:
பி.பி.ஏ., பி.சி.ஏ., குறித்த வழக்குகள் முடியும் வரை, மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஏ.ஐ.சி.டி.இ.,க்கு தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடும் அதிர்ச்சி
தொழில்நுட்பம் சாராத, பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்புகளை, இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரிகளில் துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு வெளியிட்டது.இதற்கு, கலை, அறிவியல் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் பெற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கலை அறிவியல் கல்லுாரிகள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், கடந்த, ஜன., 29ல், புதிய நடைமுறை சார்ந்த அறிவிப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இதில், ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கு, கடந்த 15ம் தேதி உயர் நீதிமன்றம் முதல் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.பதில் மனு
விசாரணையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில், இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கால அவகாசம் வேண்டும் எனவும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.உயர் நீதிமன்றம், ரிட் மனுவுக்கான பதில் மனுவை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும், 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.இதையடுத்து, பி.பி.ஏ., - பி.சி.ஏ., குறித்த வழக்குகள் முடியும் வரை, மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலருக்கு, இக்கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.