UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 08:47 AM
கண்ணகிநகர்:
சோழிங்கநல்லுார் மண்டலம், 195, 196 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய, கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர், 240 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, 23,704 வீடுகள் உள்ளன.வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த பகுதியில் குழந்தைகள் மையங்கள், பள்ளிகள் கட்ட இடம் ஒதுக்கப்பட்டன. தற்போது, 25 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. தொடக்கப் பள்ளியில், 1,500 பேர், நடுநிலையில் 400 பேர், உயர்நிலையில் 400 பேர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 1,150 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு முடிப்போர், மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும். ஆனால், அங்கு ஏற்கனவே 10ம் வகுப்பு முடித்த மாணவ - மாணவியருக்கு, 11ம் வகுப்பில் சேர முன்னுரிமை அளிப்பதால், உயர்நிலைப் பள்ளியில் இருந்து வருவோருக்கு சேர்க்கை கிடைப்பதில்லை.இதனால், 3 கி.மீ., துாரம் பயணித்து, துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி செல்ல வேண்டி உள்ளது. அங்கும் சேர்க்கை இல்லாதபோது, பெருங்குடி, அடையாறு, திருவான்மியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.பேருந்தில், நீண்ட துாரம் செல்ல வேண்டி உள்ளதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மாணவ - மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், கண்ணகி நகர் காவல் நிலையம் எதிரே, பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட காலி இடத்தில், மேல்நிலைப் பள்ளி கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.