பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்டெடுக்க கலெக்டர் அறிவுரை
பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்டெடுக்க கலெக்டர் அறிவுரை
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:35 AM
விருதுநகர்:
பள்ளி மேலாண்மை குழுக்கள் இடைநின்ற மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும், என விருதுநகரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாட்டில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.மாநாட்டை துவக்கி அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே நமது மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து கடந்த ஆண்டு உயர்கல்விக்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் 1500 பேர் பள்ளிக்கு வருவதில்லை. இந்த இடைநிற்றல் செய்த மாணவர்களில் 5 முதல் 10 சதவீத மாணவர்களே பள்ளிப்படிப்பை தொடர்ந்து இருக்கின்றனர்.மீதமுள்ள 90 சதவீதம் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தனி கவனம் செலுத்தி இடைநிற்றல் செய்த மாணவர்களின் கல்வியை தொடர முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.குடும்ப சூழ்நிலை, தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்கள், குடும்ப பிரச்சனைகளாலும், அதிக கைப்பேசி பயன்பாட்டாலும் மனதளவில் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் மாணவர்கள் இடைநிற்றல் ஆகின்றனர். ஆசிரியர்கள் கண்காணித்து பள்ளி மேலாண்மைக்குழுவுடன் ஒருங்கிணைந்து இடைநின்ற மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும், என்றார்.2023- 24ம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 25 பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார். சி.இ.ஓ., வளர்மதி, மாநில பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசகர் ரத்தின விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

