கோவையில் மீண்டும் ரேவ் பார்ட்டி: கிள்ளி எறிய வேண்டும்!
கோவையில் மீண்டும் ரேவ் பார்ட்டி: கிள்ளி எறிய வேண்டும்!
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:48 AM
கோவை:
கோவையில் மீண்டும் ரேவ் பார்ட்டி களைகட்டத் துவங்கியுள்ளது. வார விடுமுறையானால் ரேவ் பார்ட்டி நடக்கும் ரகசிய இடங்களை தேடி, இளைஞர்கள் பறக்கின்றனர். மீண்டும் துவங்கியுள்ள, ரேவ் பார்ட்டி கலாசாரத்தை ஆரம்பத்திலேயே தடுக்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க, வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ரேவ் என்றால் துள்ளல், ஆரவாரம் என்று பொருள். ரேவ் பார்ட்டிகளில், மது உள்ளிட்ட போதை சமாச்சாரங்கள் அதிகம் இருக்கும் என்பதால், பங்கேற்பவர்கள் மத்தியில் துள்ளல், ஆரவாரம் அதிகளவில் இருக்கும்.அதிர வைக்கும் இசை, மெல்லிய கற்றைகளாக லேசர் விளக்கு, உயர் ரக மது மற்றும் சட்ட விரோத போதைப் பொருட்களுடன் ஆரவாரமாக அரங்கேறும் இந்த ரேவ் பார்ட்டிகள், மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் சர்வசாதாரணம். இது போன்ற பார்ட்டிகள், கோவை இளைஞர்களையும் குறிவைத்துள்ளதுதான் லேட்டஸ்ட் அதிர்ச்சி.மூளையை மழுங்கடிக்கும், வீரியம்மிக்க போதைப் பொருட்கள் பார்ட்டிகளில் அதிகளவு இடம் பெறும் என்பதால், இங்கு வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவாக இருந்தாலும் கொடுக்க, இளைஞர்கள் தயாராக உள்ளனர்.நகர எல்லைகளில் இருக்கும் தோப்புடன் கூடிய பண்ணை வீடுகளே பார்ட்டிகள் நிகழுமிடம். எல்.எஸ்.டி., எனும் போதை மருந்து தடவிய வில்லைகள், எம்.டி.எம்.ஏ., மாத்திரை மற்றும் திரவம், உள்ளிட்ட போதைப் பொருட்கள், இத்தகைய பார்ட்டிகளில் அதிகம் இடம் பெறுகின்றன. 2018ம் ஆண்டு, பொள்ளாச்சி அருகே ரேவ் பார்ட்டி நடத்திய கல்லுாரி மாணவர்கள், 180 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுதான், கோவை மாவட்டத்தில் ரேவ் பார்ட்டிக்கான பிள்ளையார் சுழி. அதன் பின், போலீசார் உஷார் அடைந்து, தேடுதலை தீவிரப்படுத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இத்தகைய ரேவ் பார்ட்டிகள் குறைந்தன.இந்நிலையில், மீண்டும் இப்பார்ட்டிகள் தலைதுாக்கத் துவங்கியுள்ளதாக, கல்லுாரி இளைஞர்கள் சிலர் காதை கடிக்கின்றனர். இதைத்தடுக்க, போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.போதை பொருட்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்களும், ஆன்மிக குருக்களும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். பல குற்றங்களுக்கு அடித்தளமிடுவது போதையே. இதனால், கோவையில் மீண்டும் தலைதுாக்கியுள்ளதாக கூறப்படும் ரேவ் பார்ட்டிகளை, கட்டுப்படுத்த, போலீசார் களமிறங்க வேண்டும்.பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்
போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குமரேசன் கூறுகையில், இத்தகைய போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது ரேவ் பார்ட்டிகள் நடப்பதாக தெரியவில்லை. நடப்பதாக தகவல் இருந்தால், யார் வேண்டுமானாலும் போலீசாருக்கு தெரிவிக்கலாம். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து, போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார். போதை பொருட்கள் பயன்பாடு குறித்து, தகவல் தெரிவிக்க விரும்புவோர் 044 28511587, 94981 49976, 99767 24115 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

