கடினமாக உழைத்தால் உயர்ந்த இடத்தை அடைவீர்: மாணவியருக்கு கலெக்டர் அட்வைஸ்
கடினமாக உழைத்தால் உயர்ந்த இடத்தை அடைவீர்: மாணவியருக்கு கலெக்டர் அட்வைஸ்
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 05:20 PM
புதுச்சேரி:
எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உயரமான இடத்தை அடைவீர்கள் என, மாணவியருக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுரை வழங்கினார்.புதுச்சேரியில் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, கள ஆய்விலும் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், நேற்று கிருமாம்பாக்கம் அரசுப்பள்ளிமாணவியர், கலெக்டர் அலுவலகத்தை பார்வையிட்டனர்.அங்கு மாணவியர்களிடம், கலெக்டர் குலோத்துங்கன் கலந்துரையாடினார். அப்போது மாணவியரிடம், அவர்களின் எதிர்காலம் லட்சியம் குறித்து கேட்டார். அதற்கு பல்வேறு பதில்களை கூறிய மாணவிகள், அதற்கான காரணத்தையும் விளக்கினர். அப்போது மாணவி ஒருவர் கலெக்டர் உருவப்படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.தொடர்ந்து கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், நீங்கள் ஐ.ஏ.எஸ்., ஆக விரும்பினால் பள்ளிக்கூடத்தில் இருந்தே அதற்கான தயாரிப்பு பணிகளை துவங்க வேண்டும். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை தவறாமல் படிக்க வேண்டும்.தற்போது உங்களுடைய பாடப்புத்தகங்களை நன்றாக படிப்பதே போதுமானது. மேலும், பொது அறிவு புத்தகங்கள், தினசரி செய்தித்தாள்களை வாசிப்பது நல்லது.நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தான் படித்தேன். ஐந்தாவது முறையாக தான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றேன். உங்களை போன்று பள்ளிக்காலத்தில், எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி தெரியாது. ஆனால், உங்களுக்கு இப்போதே அதை பற்றி, தெரிந்திருக்கிறது. அதனால், உங்களில் பெரும்பாலானோர் நிச்சயம் ஐ.ஏ.எஸ்., ஆவீர்கள். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உயரமான இடத்தை அடைவீர்கள் என்றார்.

