மேற்குத் தொடர்ச்சி மலை அருகே சித்த மருத்துவ பல்கலை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குத் தொடர்ச்சி மலை அருகே சித்த மருத்துவ பல்கலை: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:37 PM
மதுரை:
சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலை அமைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் அமைக்க இடம் கண்டறிய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவக் கல்லுாரி உள்ளது. இதன் பழைய கட்டடத்தை சீரமைக்க தடை விதித்தும், அங்கு இடவசதி இல்லாததால் செட்டிகுளத்தில் இந்திய மருத்துவ முறைகளுக்கான பல்கலையை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் 2020ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மாற்றியமைக்கக்கோரி தமிழக சுகாதாரத்துறை சார்பில் மனு செய்யப்பட்டது.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு:
சென்னைக்கு அருகில் தனி சித்த மருத்துவ பல்கலை அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலை சட்டம் 2022ல் கொண்டு வரப்பட்டது. அது கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரியில் உள்ள பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதுப்பிக்கும் வகையில், ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: தமிழகத்தின் முதல் சித்த மருத்துவக் கல்லுாரி மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள குற்றாலத்தில் 1956 ல் துவக்கப்பட்டது. அது 1964 ல் திருநெல்வேலிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்காலிக இடத்திலேயே 60 ஆண்டுகளாக தொடர்கிறது. அவ்வளாகத்தில் போதிய இடவசதி இல்லை. இது சித்த மருத்துவக் கல்லுாரிக்கு போதுமானதாக இல்லை.இந்த மருத்துவமுறை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவானது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க விரும்பவில்லை. திட்டத்தின் தேவையைவிட, நிர்வாக வசதிக்காக பெரும்பாலும் திட்டங்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சித்த மருத்துவத்திற்கு அடிப்படையான மூலிகைகள் காடுகள் மூலம் கிடைக்கின்றன.கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையிலுள்ள சித்த மருத்துவப் பல்கலை சட்டம் கொண்டுவந்த தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலை அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்து, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைக்க தகுந்த இடத்தை கண்டறிய வேண்டும். இதனால் இந்திய மருத்துவ முறை வளர்ச்சியடையும். மனித குலத்திற்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்நாட்டின் பெருமை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு உத்தரவிட்டனர்.