மதுரை மருத்துவ கல்லுாரியில் வாக்கு எண்ணிக்கை மையம்: அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை மருத்துவ கல்லுாரியில் வாக்கு எண்ணிக்கை மையம்: அரசு பதிலளிக்க உத்தரவு
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:38 PM
சென்னை:
மதுரை மருத்துவ கல்லுாரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அமைப்பதற்கு பதிலாக வேறு இடத்தை ஒதுக்குவது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கு மதுரை மருத்துவ கல்லுாரி வளாகத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லுாரி மாணவர் சங்க தலைவர் ராஜ் முகமது மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில்'மதுரை மருத்துவ கல்லுாரியில் மார்ச் 26 முதல் மே இறுதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளன.தரை தளத்தில் உள்ள நுாலகத்தை வாக்கு எண்ணிக்கை மையமாகவும், 2வது தளத்தில் உள்ள ஆய்வகத்தை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் 'ஸ்ட்ராங்' ரூம் ஆகவும், தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.அப்போது அப்பகுதியில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக, மாணவர்களின் சுதந்திரமான செயல்பாடுகள் பாதிக்கப்படும். நுாலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டது.தேர்தல் கமிஷன் தரப்பில், கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள 12 அறைகள் மட்டுமே பயன்படுத்த உள்ளதால் ஆய்வகத்திற்கு செல்ல எவ்வித இடையூறு இருக்காது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் காவல்துறை பரிந்துரைப்படி கல்லுாரியில் உள்ள உள்கட்டமைப்பு பாதுகாப்பு வசதிகள் கருதியே இந்த மருத்துவ கல்லுாரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதை தவிர்க்கும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருந்தாலும், அவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை தான் ஏற்படுகிறது. வாக்கு எண்ணிகை மையத்தில் தற்காலிக ஏற்பாடுகளுக்கு இதுவரை இரண்டு கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.அப்போது, ஏன் வேறு இடம் கூடாது; ஒவ்வொரு தேர்தலுக்கும் இரண்டு கோடி ரூபாய் செலவாகிறது எனில், தனியாக கட்டடத்தை கட்டிக் கொள்ளலாம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அடுத்த முறை மருத்துவ கல்லுாரிகளை தேர்வு செய்வதை தவிர்க்கலாம் என்றனர்.மேலும் ஒரு மாதம் கல்லுாரி வளாகத்தில் குறிப்பிட்ட பகுதியை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால் ஏன் வேறு இடத்தை ஒதுக்கக் கூடாது என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 22க்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.