சீனியாரிட்டிபடி பதவி உயர்வு வழங்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்
சீனியாரிட்டிபடி பதவி உயர்வு வழங்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்
UPDATED : நவ 22, 2010 12:00 AM
ADDED : நவ 22, 2010 11:30 AM
மதுரை: ‘அரசு, தனியார் என அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒட்டு மொத்த சீனியாரிட்டிபடி, பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என, தமிழக உதவி ஆசிரியர்கள் சங்கம் (டாடா) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக துவக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கென பல்வேறு சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது உதவி ஆசிரியர்கள் சங்கம் (டாடா- தமிழ்நாடு அசிஸ்டென்ட் டீச்சர் அசோசியேஷன்) என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது.
மாநில தலைவர் கார்த்திகேயன் (ஈரோடு) தலைமை வகித்தார். கூட்டத்தில், மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்குதல், பதவி உயர்வில் இடமாறுதல் பெறும்போது, ஜூனியர்களுக்கு கீழ் பணியாற்றும் நிலையை மாற்ற வேண்டும். பணி நியமனத்திற்கு லஞ்சம் பெறும் தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியத்தை நிறுத்தி, அங்கீகாரத்தை திரும்ப பெற வேண்டும். அரசிடம் ஊதியம் பெறும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒட்டுமொத்த சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து, அதன்படி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத்தை நீக்கி, பழைய முறையை அமல்படுத்த வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு அடுத்த தர ஊதிய நிலை ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை செயலர் மணவாளன் நன்றி கூறினார்.
