UPDATED : நவ 24, 2010 12:00 AM
ADDED : நவ 24, 2010 02:47 PM
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கேட் தேர்வு கடந்த முறை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவிலுள்ள என்.ஐ.டி -கள், ஐ.ஐ.டி -கள், குறிப்பிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சில மாநில கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட உள்ளது.
வழக்கமான முறையிலான ஏ.ஐ.இ.இ.இ., எழுத்து தேர்வுகள், 2011, ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும். ஆன்லைன் தேர்வானது, அதே ஆண்டு மே 1 முதல் 15 வரையிலான தேதிகளில் நடைபெறும். அதிகபட்சமாக 1 லட்சம் பேர் ஆன்லைன் தேர்வினை எழுத முடியும். முதலில் விண்ணப்பம் செய்பவர்கள் யார் என்ற வரிசை அடிப்படையிலேயே அந்த 1 லட்சம் பேர் தேர்வுசெய்யப்படுவார்கள்.
பி.இ./பி.டெக்./ பி.ஆர்க்./பி.பிளானிங் படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வமுள்ள ஏறக்குறைய 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தகவல் புல்லட்டின் விற்பனை வரும் டிசம்பர் 15 முதல் தொடங்கும்.
ஆன்லைன் தேர்வானது நாடு முழுவதும் 20 பெருநகரங்களில் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு நகரத்திலும் 5000 பங்கேற்பாளர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுவார்கள் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தங்களின் முறைக்கான தேதி விவரம் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், வரும் காலங்களில் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு முழுவதும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் மற்றும் இது உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் தேர்வாகவும் இருக்கும்.
