இந்திய அறிவியல் மாநாட்டை துவக்குகிறார் மன்மோகன் சிங்
இந்திய அறிவியல் மாநாட்டை துவக்குகிறார் மன்மோகன் சிங்
UPDATED : நவ 27, 2010 12:00 AM
ADDED : நவ 27, 2010 11:54 AM
சென்னை: சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடைபெறவுள்ள 98வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைக்கிறார். இதற்காக ஜனவரி மாதம் அவர் சென்னைக்கு வருகிறார்.
இந்திய அறிவியல் மாநாடு கூட்டமைப்புத் தலைவர் பாண்டே, எஸ்.ஆர்.எம்., பல்கலை துணைவேந்தர் சத்தியநாராயணன், பிரைட் ஆப் இந்தியா இயக்குனர் ரவி போரத்கர் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 98 வது இந்திய அறிவியல் மாநாடு ஜன. 3 முதல் 7 வரை நடை பெற உள்ளது. மாநாட்டை ஜன. 3ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைக்கிறார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டை விஞ்ஞானி வெங்கட்ராம ராமகிருஷ்ணன் ஜன. 4ல் துவக்கி வைப்பார்.
மாநாட்டுக்கான விஞ்ஞான் ஜோதி, டெல்லியிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் அமர்த்தியாசென், வெங்கட்ராம ராமகிருஷ்ணன், அடா யோனத், தாமஸ் ஸ்டீட்ஸ், டிம் ஹன்ட் மற்றும் மார்ட்டின் சால்பி மாநாட்டில் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடுவர்.
‘இந்திய பல்கலைகளில் தரமான கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் மேன்மை’ என்ற தலைப்பில் நடக்கும் இம்மாநாட்டில், 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அமெரிக்காவின் எம்.ஐ.டி., கல்வி மைய டீன் சுப்ரா சுரேஷூக்கு மாநாட்டுத் தலைவர் விருது வழங்கப்படும். மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
