UPDATED : நவ 29, 2010 12:00 AM
ADDED : நவ 29, 2010 02:31 PM
குரோம்பேட்டை: தென்சென்னை பகுதி பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்காக தினமலர் நாளிதழ் சார்பில், குரோம்பேட்டை எம்.ஐ.டி., அரங்கத்தில் நேற்று நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்து வரும் தினமலர் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.
இந்தாண்டும், தென்சென்னை பகுதி மாணவ, மாணவியருக்காக குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., வளாகத்தில் நேற்று முன்தினம் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது.
அடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 8.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிகாலை முதலே மாணவ, மாணவியர் எம்.ஐ.டி., அரங்கத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, மாணவர்களுக்காக எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் பிரத்யேக வழிகாட்டி புத்தகம், தேர்வுக்கு வரும் முக்கிய வினாக்கள் அடங்கிய ப்ளூ பிரின்ட் புத்தகம், மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாப்பது குறித்த ஹெல்த் புத்தகம், குறிப்பெடுக்கும் பேனா, நோட்டு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பொதுத்தேர்வை எவ்வாறு அணுகுவது; அதிக மதிப்பெண் பெறுவது எப்படி; 100க்கு 100 மதிப்பெண்களை முழுமையாக பெறுவது எப்படி என்பது போன்ற ஆலோசனைகளை ஆசிரியர்கள் அள்ளி வழங்கினர். இவை அனைத்தும் மாணவ, மாணவியர் குறிப்பெடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
தினமலர் நாளிதழின் சார்பில் நடத்தப்படும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியின் மூலம், அடுத்தாண்டு இங்கு வர வேண்டிய பிளஸ் 2 மாணவ, மாணவியர் இப்போதே எம்.ஐ.டி.,க்கு வந்துவிட்டனர். இதன்மூலம் முதலடியை எடுத்து வைத்துள்ளீர்கள்.
பிளஸ் 2 முடித்ததும் என்ன படிக்க போகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்தால் பொறியியல், மருத்துவம், பேஷன் டெக்னாலஜி, கலை அறிவியல் உள்ளிட்ட பெரும்பாலானவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, பிளஸ் 2வில் அக்கறை செலுத்தி நல்ல மதிப்பெண் பெற வேண்டும். ஒவ்வொரு பாடமும் கஷ்டமாகத்தான் தெரியும். நாம் மனதில் எந்தெந்த பாடம் கஷ்டமானது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட பாடத்தில் எந்த முறையில் அணுகினால் 98 முதல் 99 மதிப்பெண் பெறுவது எப்படி? என்பது புரியும். இந்நிகழ்ச்சியின் நோக்கமே அதுதான்.
பிளஸ் 2 முடித்ததும், கல்லூரிக்கும் செல்லும் வயது சரியா? தவறா என தெரியாத விடலைப் பருவம் இது. இதனால், கவுன்சிலிங்கில் நல்ல கல்லூரி கிடைத்தும், தோற்றுவிடுகிறோம். சினிமாவில், 98 சதவீதம் காதலை மையப்படுத்தியே வருகிறது. அதிலிருந்து மீளவேண்டும் என்றால், குடும்பத்தின் மீது நம் கவனத்தை திருப்பி விட வேண்டும். வாழ்க்கைத் துணையை முடிவு செய்யும் வயது இதுவல்ல. அறிவு மற்றும் உணர்ச்சி அனைவருக்கும் உண்டு. இதை சரிசமமாக பயன்படுத்தினால் மட்டும் நமக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த வயதில் நாம் என்னவாக வேண்டும் என ஆசைப்பட்டால், அதுவாகவே ஆவோம். படித்து முடித்ததும், குடும்பத்தை தூக்கி நிறுத்தப் போகிறான் என பெற்றோர் பணத்தை செலவு செய்கின்றனர். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றதும், பட்டப்படிப்பு. அதன் பின் வேலையில் சேர்ந்ததும், முதல் வேலையாக அம்மாவுக்கு சேலையும், அப்பாவுக்கு வேட்டியும் வாங்கித் தருவேன் என லட்சியமாக இருந்தால், வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம்.
இந்த வயதில் தனியாக இருந்தால்தான் தவறு செய்யத் தோன்றும். அதை தவிர்த்து, ஒரு பகுதி நேரம் நண்பர்கள், மற்றொரு பகுதி நேரம் குடும்பத்துடன் செலவு செய்தால் யாரும் தவறான வழிக்கு போக மாட்டார்கள். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.
