UPDATED : நவ 29, 2010 12:00 AM
ADDED : நவ 30, 2010 05:31 PM
தமிழகத்திலுள்ள வேலூர் தொழில்நுட்ப கழகம்(வி.ஐ.டி) மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம்(ஐ.ஐ.எஸ்.டி) ஆகிய கல்வி நிறுவனங்கள் பொறியியல் படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்றவை. ஆனால் தற்போது இந்த இரு கல்வி நிறுவனங்களும் தங்களின் அடுத்த கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வை 2011, ஏப்ரல் 16 என்று ஒரே தேதியில் ஏற்பாடு செய்து மாணவர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளன.
இந்த இரு கல்வி நிறுவனங்களின் நுழைவுத்தேர்வுகளையுமே எழுதுவதில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில், இரண்டில் ஏதாவது ஒன்றையே தேர்வுசெய்யக்கூடிய இக்கட்டான சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் தரப்பில் இந்த இரு கல்வி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தேதி விஷயத்தில் மாற்றம் பற்றிய வேண்டுகோள் வைக்கப்பட்டபோது, அந்த நிறுவனங்கள் தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
வி.ஐ.டி. தனது தேதியை செப்டம்பர் மாதமே அறிவித்துவிட்டது. ஆனால் ஐ.ஐ.எஸ்.டி. தனது தேதியை நவம்பர் மாதம்தான் அறிவித்தது. இரு கல்வி நிறுவனங்களில் ஏற்பட்ட நிர்வாகத் தவறால், தற்போது மாணவர்களே பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க அந்த கல்வி நிறுவனங்கள்தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று மாணவர் தரப்பில் கூறுகின்றனர்.
