UPDATED : டிச 02, 2010 12:00 AM
ADDED : டிச 02, 2010 12:02 PM
சி.பி.எஸ்.இ. அமைப்புடன் இணைக்கப்பட்ட, நாட்டிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் தங்களுக்கென ஒரு வலைதளத்தை இனி கொண்டிருக்கும். சி.பி.எஸ்.இ. அமைப்பு, தன்னுடன் இணைக்கப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலும் உள்ள பள்ளிகள், விரைவில் தங்களுக்கென்று ஒரு தனி இணையதளம் தொடங்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த வலைதளத்தில், பள்ளியின் நிர்வாக அமைப்பு, பள்ளியின் இடப் பரப்பளவு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருட்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளங்கள், மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் ஆகியவைப் பற்றிய விரிவான தகவல்கள் இருக்க வேண்டும்.
இதன்மூலம், மாணவர்களும் பெற்றோர்களும் சி.பி.எஸ்.இ. விதிகளின்படி, பள்ளியின் தரம் மற்றும் தன்மைகளைப் பற்றி எளிதாக அறிந்துகொள்ள முடியும். தற்போது இந்தியாவிலும், சில குறிப்பிட்ட வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 10,500 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சி.பி.எஸ்.இ. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இன்னும் முழுதாக நிறைவேற்றாத பள்ளிகளுக்கு, அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதற்கான காலக்கெடு பற்றி கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் வருடாந்தர அறிக்கைகளை தயார்செய்து அவற்றை வலைதளத்தில் இடவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வெளிப்படையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. கபில்சிபல் அவர்களின் முயற்சிகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களும், தங்களின் வலைதளங்களில் கல்வி நிறுவனங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் இடுமாறு, தொழில்நுட்ப கல்விக்கான அனைத்திந்திய கவுன்சிலால் (ஏ.ஐ.சி.டி.இ.) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
