UPDATED : டிச 04, 2010 12:00 AM
ADDED : டிச 04, 2010 04:58 PM
வேலூர்: திருவள்ளுவர் பல்கலை தேர்வில், குளறுபடியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், மறுத்தேர்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அக்கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்தார். வேலூர் திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு கடந்த மாதம் நடந்தது.
இதில் பி.காம்., மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ஐந்தாவது செமஸ்டர், வருமான வரிச் சட்டம் தியரி தேர்வில், 40 சதவீதம் கேள்விகள் கணக்குகளாக கேட்கப்பட்டன. இரண்டாம் ஆண்டு வணிக பொருளியல் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கேள்விகள் வந்துள்ளது என, பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாணவர்கள், ஏராளமான புகார்கள் அனுப்பினர். இதனால், மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக, மீண்டும் தேர்வு நடத்தும்படி, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆய்வு செய்ததில், வினாத்தாள் தயாரிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது தெரிந்தது.
திருவள்ளுவர் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜசேகரன் கூறுகையில், “வினாத்தாள் தயாரிப்பதில் ஏற்பட்ட குளறுபடியால், தேர்வு எழுதிய மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தியரிக்கான தேர்வில் கணக்குகள் கேட்கப்பட்டதாலும், பாடத் திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கும் அந்த வினாக்களுக்கான எண்ணை விடைத்தாளில் எழுதி, பதிலை தவறாக எழுதி இருந்தாலும், அந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்,” என்றார்.
