அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்பு ஐ.டி., அமைச்சர் நம்பிக்கை
அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்பு ஐ.டி., அமைச்சர் நம்பிக்கை
UPDATED : டிச 15, 2010 12:00 AM
ADDED : டிச 15, 2010 02:53 PM
சென்னை லயோலா கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறையும், "சாப்ட்வியூ' நிறுவனமும் இணைந்து, அனிமேஷன் டிப்ளமா படிப்பை துவக்கியுள்ளன. இதன் துவக்க விழா கல்லூரியில் நேற்று நடந்தது. தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை புதிய படிப்பை துவக்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் பூங்கோதை பேசியதாவது:
அடுத்த நூற்றாண்டு இந்தியா, சீனாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்தியா அறிவு சார்ந்த பொருளாதாரமாக உருவாகி வருகிறது. இது லயோலா கல்லூரி போன்ற கல்வி மையங்களால் தான் ஏற்பட்டது. கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் தரமான கல்வி வழங்கப்படுவதற்கான அடித்தளத்தை அமைத்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வளர 200 300 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. அனைவரையும் எளிதில் ஈர்க்கும் தியாக, அனிமேஷன் உள்ளது. இதை பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல், கல்வி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும்.
புறநானூறு, தொல்காப்பியம் உள்ளிட்டவற்றை அனிமேஷன் வடிவில் வழங்க வேண்டும். அனிமேஷன் துறை மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது. மாணவர்கள் அனிமேஷன் துறை நிபுணர்களாக மட்டும் இல்லாமல், தொழில் முனைவோராகவும் உயர வேண்டும்.
சென்னையில் அனிமேஷன் பூங்கா அமைக்கப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான ஆயத்தப்பணிகள் விரைவில் துவக்கப்படும். இவ்வாறு பூங்கோதை பேசினார். விழாவில் லயோலா கல்லூரி முதல்வர் ஜெயராஜ், செயலர் ஜோ அருண், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், "சாப்ட்வியூ' நிறுவன இயக்குனர் ஆண்டோ பீட்டர், சினிமா இயக்குனர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
