பல்கலையாக தரம் உயர்த்த எதிர்ப்பு: கோவையில் 11 மாணவர்கள் கைது
பல்கலையாக தரம் உயர்த்த எதிர்ப்பு: கோவையில் 11 மாணவர்கள் கைது
UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதில் 11 சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி, இன்ஜினியரிங், கல்லூரி, மருத்துவ கல்லூரி, நர்சிங், பாராமெடிக்கல் கல்லூரி உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து பி.எஸ்.ஜி.,ஒருமை (யுனிட்டரி) பல்கலையாக தரம் உயர்த்தவுள்ளதாக, சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த மே மாதத்தில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தார்.
இதற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ., க்களைத்தவிர, பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் 16 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக தரம் உயர்த்துவது பற்றி, கல்வி நிறுவன நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி நடத்தியது.
இந்த கூட்டத்தில் பல்கலையாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க 600க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவம், பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களை, பல்கலையாக தரம் உயர்த்துவதற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி வாகனங்களில் அழைத்து வந்தது பி.எஸ்.ஜி., நிர்வாகம். இதனால், கோவை கலெக்டர் அலுவலகம் மாணவ, மாணவியர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள், பி.எஸ்.ஜி., நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது வெறும் 10 மாணவ, மாணவியருக்கு மட்டுமே கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக தரம் உயர்த்தக்கூடாது’ என மாணவியர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அமைச்சர் பொன்முடி, இரு நிமிடத்துக்கு மேல் பேச அனுமதிக்கவில்லை என மாணவியர் குற்றம் சாட்டினர்.
அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் கூறுகையில், “கருத்துக்களை பதிவு செய்ய கால அவகாம் வழங்கப்படவில்லை; மனுவை வாங்கிவிட்டு செல்லுங்கள் என்று மட்டும் அமைச்சர் கூறுகிறார். இங்கு நடந்த எந்த விஷயங்களையும் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க கூடாது என அமைச்சர் நிர்ப்பந்திக்கிறார்,” என குற்றம் சாட்டினர்.
கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை மட்டும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதால், மற்ற மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மாணவர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் அரங்கிற்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் கயிறைக் கொண்டு சுற்றிலும் நின்றனர்.
இந்நிலையில் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 11 பேர், பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்துடன், கூட்டம் நடத்தும் அரங்கிற்கு செல்ல வேகமாக ஓடினர்.
உஷாரான போலீசார் அத்தனை மாணவர்களையும் மடக்கினர். இதனால், மாணவர்கள்- போலீசார் இடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது இரு தரப்பினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களுக்கு எதிராக 11 மாணவர்களும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து 11 மாணவர்களையும் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள், போலீஸ் வாகன டிரைவரை வாகனத்தை ஓட்ட முடியாதபடி தடுத்தனர். வெளியில் இருந்த மற்ற மாணவர்கள், போலீஸ் வாகனத்தின் குறுக்கே மறித்து அரணாக நின்றனர். சில மாணவர்கள் வாகனத்தின் குறுக்கே படுக்கவும் முயற்சித்தனர். இறுதியில் அனைத்து மாணவர்களையும் அப்புறப்படுத்தி, கைது செய்ய மாணவர்களை போலீசார் கொண்டு சென்றனர்.

