UPDATED : பிப் 25, 2011 12:00 AM
ADDED : பிப் 25, 2011 03:08 PM
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள அரசு உதவிபெறாத மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அந்த சட்டம் தங்களின் தனிப்பட்ட நிர்வாக உரிமையை சிதைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் கட்டாய இலவச கல்வியைப் பெற வேண்டும் என்பதுதான் அந்த சட்டத்தின் முக்கிய அம்சம். மேலும் இந்த சட்டத்தின்கீழ் அரசு உதவிபெறாத மற்றும் சிறுபான்மை இனப் பள்ளிகள் தங்கள் சார்பாக கல்வி உரிமை சட்டத்தின்கீழ் வரும் மாணவர்களுக்கு 25% கட்டாய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதும் ஒரு அம்சம். ஆனால் இந்த ஒதுக்கீட்டைத்தான் அந்த பள்ளிகள் எதிர்க்கின்றன.
எங்களின் நிர்வாகம் மற்றும் உரிமையில் அரசு தலையிடக்கூடாது என்பதுதான் எங்களின் தனி உரிமையே. ஆனால் இந்த சட்டத்தின் மூலம் அந்த உரிமை பறிபோய்விடும். சுயமாக இயங்கிவரும் நாங்கள், எங்களின் விருப்பப்படியே முடிவெடுப்போம். அரசு எந்த சட்டத்தின் மூலமும் எங்களை கட்டுப்படுத்தக்கூடாது. இந்த ஒரு சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டாலே, எங்களின் உரிமையை நாங்கள் இழந்துவிட்டதாகவே அர்த்தம்" என்று அந்த நிறுவனங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஆனால் இதற்கு பதிலளித்த நீதிமன்றம், "அரசின் கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது. மாணவர்களுக்கு கல்வி கொடுத்து அதன்மூலம் நாட்டை முன்னேற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஏன் ஒத்துழைக்கக் கூடாது? மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதன் மூலமாக நீங்கள் நாட்டிற்கு சிறந்த முதலீட்டை தருகிறீர்கள். இதிலென்ன உங்களுக்கு கஷ்டம்? அரசின் இதுபோன்ற கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது. மேலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே பள்ளிகளின் நோக்கமாக இருக்கக்கூடாது" என்றது.
இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 3 ம் தேதி தொடர்ந்து நடைபெறும்.
