பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம்
பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம்
UPDATED : பிப் 26, 2011 12:00 AM
ADDED : பிப் 26, 2011 04:14 PM
விருதுநகர்: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள் பிப். 28 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் கழகம் ஆகியவை இணைந்து ‘ஜேக்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இவர்கள், மத்திய அரசுக்கு இணையான சம்பளம், மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குனரகம், 2006 மே 1 முதல் பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் பெற்ற நாளில் இருந்து கால முறை ஊதியம், கலைப்பிரிவுக்கு அக மதிப்பீட்டு திட்டம், தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிடல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 26 முதல் மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
போராட்ட குழு நிர்வாகிகளிடம் நேற்றுமுன்தினம் மாலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, கூடுதல் நிதித்துறை செயலாளர் பத்மநாபன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஒரு தாளுக்கு 5 ரூபாய் என்பதை 10 ரூபாயாக வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றனர். பிற கோரிக்கைகளை ஏற்காததால், திட்டமிட்ட படி போராட்டம் நடத்த ‘ஜேக்’ அமைப்பு முடிவு செய்தது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் சுப்பையா கூறியதாவது: எங்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்ற அரசு முன் வரவில்லை. திட்டமிட்டபடி பிப்., 26, 27 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், பிப்.,28 முதல் தொடர் வேலை நிறுத்தமும் செய்வோம். தமிழகத்தில் உள்ள 3,500 தலைமையாசிரியர்கள், 25 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். பிளஸ் 2 தேர்வு பணிகளை முழுமையாக புறக்கணிப்போம், என்றார்.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 முதல் துவங்கவுள்ளது. ஏற்கனவே அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வு பணிகளில் ஈடுபட முடியாது என கடிதம் கொடுத்துவிட்டனர். இதனால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
