எதிர்பார்த்த வினாக்கள் தான் வந்தது : பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
எதிர்பார்த்த வினாக்கள் தான் வந்தது : பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 01:02 PM
திண்டுக்கல்: பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் பின்தங்கிய மாணவர்களும் எளிதில் பதில் தரும் வகையில் வினாக்கள் அமைந்திருந்ததாக ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைபள்ளி முதுகலை தமிழாசிரியர் பி. ராஜேந்திரன் கூறியதாவது:
பாடத்திட்டத்திற்குட்பட்டு தான் அனைத்து வினாக்களும் வந்துள்ளன. பெரும்பாலும் எதிர்பார்த்த வினாக்கள் தான். பின்தங்கிய மாணவரும் எளிதில் பதில் தரும் வகையில் வினாக்கள் அமைந்திருந்தன. கடந்த ஆண்டு வினாத்தாள்கள் சிலவற்றை தொகுத்து படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும்.
கேட்ட வினாக்கள் தான் மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. மொழிபெயர்ப்பு வினாக்கள் மிக எளிதாக இருந்தன. அதில் முழு மதிப்பெண் பெறலாம். திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெ.அருள் விஜய்: ஆசிரியர்கள் சொல்லி கொடுத்த அனைத்து வினாக்களும் வந்திருந்தன. பெரும் பாலான கேள்விகள் தமிழ் இரண்டாம் தாள் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுஇருந்தன.
4 மதிப்பெண் கேள்வியில் நாடகத்தமிழின் சிறப்பியல்புகள், செம்மொழியின் இலக்கணம் எதிர்பார்த்தது தான். மிகவும் எளிதாக இருந்தது. இதுமாதிரி 6 மதிப்பெண் கேள்வி சற்று குழப்பி கேட்டிருந்தனர். படித்திருந்தால் எழுதி விடலாம். 10 மதிப்பெண் கேள்வி மிகவும் எளிது. செய்யுளில் எதுகை, மோனை, இயல்பு, முரண் அணி எழுதுவதற்கு நேரம் அதிகம் எடுத்து விட்டது.
கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.விஜயக்குமார்: சில கேள்விகள் எதிர்பார்க்காமல் வந்து விட்டது. 6 மதிப்பெண் கேள்வியில் எப்போதுமே முதல் மற்றும் இரண்டாம் பாடத்தில் இருந்து கேள்வி கேட்பார்கள். ஆனால் இந்த முறை 4வது பாடத்தில் இருந்து கேள்வி கேட்டு விட்டனர்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் தருவதில் முதலில் 3 வினாக்கள் பழமொழியாக கேட்பார்கள். 2 வினாக்கள் மட்டும் பழமொழியாக கேட்டு விட்டு, 4 வினாக்கள் வாக்கியமாக கேட்டு விட்டனர். தமிழ் இரண்டாம் தாளில் அனைத்து வினாக்களுக்கும் சமாளித்து எழுதியுள்ளேன்.
