மாணவர்களின் படிப்பில் தேர்தல் கமிஷனுக்கு அக்கறை இல்லையா?
மாணவர்களின் படிப்பில் தேர்தல் கமிஷனுக்கு அக்கறை இல்லையா?
UPDATED : மார் 06, 2011 12:00 AM
ADDED : மார் 06, 2011 11:32 AM
யாரும் எதிர்பாராத வகையில் வரும் ஏப்ரல் 13 ல் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, மெட்ரிக்., தேர்வுகள் நடக்கும் நேரத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும். இது தேர்வு எழுதும் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். தற்போது பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகிறது. மெட்ரிக் தேர்வு மார்ச் 22 ல், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் துவங்குகிறது. ஏப்.11 ல் தேர்வுகள் முடிகிறது.
பொதுத்தேர்வு முடிந்த பிறகு தான் தேர்தல் என்ற கணக்கில் ஏப்.,13ல் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கான அனைத்து நடைமுறைகளும் மார்ச் 19 ல் துவங்கிவிடும். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும். வீடுவீடாக ஓட்டு கேட்பர். பொதுக்கூட்டங்கள் நடக்கும். ஊர்வலங்கள் செல்வர். ஒலிபெருக்கிகள் அலறும். இவை எல்லாம் மாணவர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறுகையில், "தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதை ஏற்க முடியாது. பள்ளி வளாகங்களில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசாரம் குறைந்த சத்தத்தில்தான் இருக்கும்&'&' என்றார்.
தேர்தல் கமிஷனின் உத்தரவை அப்படியே கட்சிகள் பின்பற்றுவார்களா? அதனை தெருதோறும் கண்காணிக்க போதிய அதிகாரிகள் இருக்கிறார்களா? இது எல்லாம் நடைமுறை சாத்தியங்கள் இல்லை. அதுவும் பள்ளி அருகில்தான் கட்டுப்பாடு. வீடுகளில் மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் போது ஏற்படுகின்ற பாதிப்பிற்கு யார் பொறுப்பு? எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு.
