UPDATED : மார் 11, 2011 12:00 AM
ADDED : மார் 11, 2011 10:02 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று இயற்பியல் தேர்வு நடக்கிறது. இதையொட்டி, தேர்வுத்துறை, கல்வித்துறை அலுவலர்களுடன், அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர்களும், தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை, பிளஸ் 2 தேர்வில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
முக்கியப் பாடங்களில் ஒரு மதிப்பெண் குறைந்தாலும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களை விட பின்னுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அரை மதிப்பெண் கூட மிகவும் முக்கியம் என்ற நிலையில், இன்று இயற்பியல் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இதையொட்டி, தேர்வுத்துறை, கல்வித்துறை, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோருடன், கூடுதலாக அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர்களும், இன்று தேர்வு மையங்களுக்கு சென்று, மாணவர்களை கண்காணிக்க உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையைச் சேர்ந்த இணை இயக்குனர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்வு பணிகளை பார்வையிட சென்றுள்ளனர். முக்கிய பாடங்களுக்கான தேர்வையொட்டி, தேர்வு மையங்களின் தலைமை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாமக்கல், ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
