UPDATED : ஆக 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதற்கட்ட கவுன்சிலிங் ஏற்கனவே நடந்து முடிந்தது. இதன் பிறகும் 168 இடங்கள் காலியாக இருந்தன.
புதிதாகத் துவக்கப்பட்டுள்ள தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் காலியாக உள்ளன.
ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றுவிட்டு சேராத மாணவர்கள் மற்றும் சேர்ந்த பின் கல்லூரியை விட்டு விலகிச் சென்ற மாணவர்களால் 83 இடங்கள் காலியானது.
இந்த 168 இடங்களையும் நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவத் தேர்வுக்குழு வளாகத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி காலை துவங்கியது. சென்னை மருத்துவக் கல்லூரியில் ஐந்து பொதுப்பிரிவு இடங்கள் உட்பட 10 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன.
முதல்கட்ட கவுன்சிலிங்கில் ஓ.சி., - 433, பி.சி., - 321, பி.சி.சி., - 49, பி.சி.எம்., - 49, எம்.பி.சி., - 280, எஸ்.சி., - 252, எஸ்.டி., - 14 என ஆயிரத்து 398 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் விருப்பமுள்ளவர்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள், காலியாக உள்ள இடங்களில் சேர அனுமதிக்கப்பட்டனர். முதல்கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்கள் 12ம் தேதி கவுன்சிலிங் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவத் தேர்வுக்குழுச் செயலர் ஷீலா கூறுகையில், “தர்மபுரி மருத்துவக் கல்லூரி புதிய கல்லூரி என்பதால் அதில் 85 இடங்கள் காலியாக உள்ளன. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சிலர் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டதால் தங்கள் இடங்களை ‘சரண்டர்’ செய்துள்ளனர்.
மருத்துவப் படிப்பை உதறிவிட்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பாதிப்பு எதுவும் இல்லை. அடுத்த ‘ரேங்க்’கில் உள்ள மாணவர்கள் மூலம் இடங்கள் நிரப்பப்படும்,” என்றார்.

