ஸ்லாஸ் தேர்வில் 30வது இடத்தில் கரூர்; கல்வித்துறை அமைச்சர் தகவல்
ஸ்லாஸ் தேர்வில் 30வது இடத்தில் கரூர்; கல்வித்துறை அமைச்சர் தகவல்
UPDATED : ஆக 06, 2025 12:00 AM
ADDED : ஆக 06, 2025 09:11 AM

கரூர்:
மாநில அளவிலான அடைவு தேர்வில், (ஸ்லாஸ்) தமிழக அளவில், 30 வது இடத்தில் கரூர் மாவட்டம் பிடித்துள்ளது என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
கரூர் அருகே, தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லுாரியில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்த திறன் மீளாய்வு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
கடந்த பிப்ரவரியில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு தேர்வு (ஸ்லாஸ்) நடந்தது. இதில், 3ம் வகுப்பில், 92.33 சதவீதம், 4ம் வகுப்பில், 95.02 சதவீதம், 5ம் வகுப்பில், 93.09 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
மாநில தர வரிசையில் கரூர் மாவட்டம், 3ம் வகுப்பில், 32வது இடம், 4ம் வகுப்பில், 29வது இடம், 5ம் வகுப்பில், 25வது இடத்தை பெற்றுள்ளது. மொத்தமாக மாவட்டம், 30வது இடத்தை பிடித்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையே, கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவத்துார் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, 79.6 சதவீதம் அடைவுத் திறனுடன் முதல் இடத்தையும், தொடக்கப் பள்ளிகளில், க.பரமத்தி ஒன்றியத்தை சேர்ந்த மோலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 97.5 சதவீத்துடன் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை மேம்படுத்த, மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டு, மாதிரி செயல் திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், முதல்வர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முனைவர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.