கோட்டைக்காடு அரசு பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தல்
கோட்டைக்காடு அரசு பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தல்
UPDATED : ஆக 27, 2026 07:48 PM
ADDED : ஆக 27, 2026 07:49 PM
செய்யூர்:
கோட்டைக்காட்டில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள அரசு பள்ளியை இடித்து அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு பகுதியில், 1962 ஆண்டில் இருந்து அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலை துறையினர் இப்பள்ளியை அளவீடு செய்தனர். அதன்பின் பள்ளியை இடித்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற நெடுஞ்சாலை துறை சார்பில், சித்தாமூர் வட்டார வளர்ச்சி நிர்வாகத்திற்கு 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பள்ளிக்கான மாற்று இடம் தேர்வு செய்யப்படாமல், வட்டார வளர்ச்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து கோட்டைக்காடு பகுதி மக்கள் கூறியதாவது:
கோட்டைக்காடு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு சொந்தமான 60 சென்ட் இடத்தில் தொடக்கப்பள்ளி கட்ட வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் பேரூராட்சி விதிகளின் படி அனுமதி மறுக்கப்பட்டதால், வருவாய்த்துறை சார்பில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் வடிகால்வாய் அமை ந்துள்ளதால், மழைகாலத்தில் மாணவர்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
தற்போது, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதுவரை புதிய பள்ளி கட்டடம் அமைக்கப்படாததால், பள்ளி மாணவ மாணவியர் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய பள்ளி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
