UPDATED : ஜன 17, 2026 11:53 AM
ADDED : ஜன 17, 2026 11:54 AM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் குறள் வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறள் வார விழாவையொட்டி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு குறள் வினாடி வினாவிற்கான தகுதி சுற்று நடந்தது. அதில் தேர்வானவர்களுக்கு வினாடி வினா போட்டி நடந்தது. அதேபோல், பொதுமக்களுக்கு குறள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டி நடந்தது. போட்டியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் 151 பேரும், பொதுமக்கள் 45 பேரும் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த், வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயமும், பொதுமக்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் ஓவியபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2வது பரிசு ரூ.3 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

