உலகம் உங்கள் கையில் திட்டத்தில் 3476 மாணவர்களுக்கு 'லேப்டாப்'
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் 3476 மாணவர்களுக்கு 'லேப்டாப்'
UPDATED : ஜன 08, 2026 03:40 PM
ADDED : ஜன 08, 2026 03:41 PM
ராமநாதபுரம்:
தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 3476 மாணவர்களுக்கு லேப்டாப்கள் ரூ.7 கோடியே 52 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம், வேளாண்மை சட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், நர்சிங். தொழிற் பயிற்சி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உலகம் 'உங்கள் கையில் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 அரசு கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 21 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 3476 மாணவர்களுக்கு லேப்டாப்கள் ஒன்று ரூ.21,650 வீதம் ரூ.7 கோடியே 52 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது. இதன் துவக்க விழா ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீ நிகம், எம்.எல்.ஏ.,க்கள் பரமக்குடி முருகேசன், திருவாடானை கருமாணிக்கம் ஆகியோர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சேதுபதி அரசு கல்லூரி மாணவர்கள் 361 பேர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 85 பேர் என 446 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, உதவி திட்ட அலுவலர்கள் ராஜா முகமது, வேதா, சேதுபதி அரசு கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

