பள்ளி கட்டடங்களுக்கு ஒப்புதல் அரசு முடிவெடுக்க கெடு
பள்ளி கட்டடங்களுக்கு ஒப்புதல் அரசு முடிவெடுக்க கெடு
UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 10:05 PM

சென்னை:
தனியார் பள்ளி கட்டடங்களுக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் சங்க உறுப்பினர்கள், பள்ளி கட்டடங்களுக்கு ஒப்புதல் கோரி நேரிலோ, ஆன்லைன் தளத்திலோ விண்ணப்பிக்க, வீட்டுவசதி துறை மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குனர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.
பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்க ஏதுவாக, இந்த அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.விஜயன் ஆஜராகி, வரன்முறை திட்டத்தின் கீழ், கட்டடங்களுக்கான ஒப்புதல் கோரி, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை, என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக் ஜெகநாத், கடந்த 2011 ஜனவரி 1க்கு முன் கட்டப்பட்டு, இயங்கி வரும் கட்டடங்களுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, 2025 ஜனவரி 31 வரை, அரசு அவகாசம் வழங்கி உள்ளது. அதற்கான உத்தரவு, கடந்த ஜூன் 25ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது, என்றார்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர் விஜயன், கடந்த ஜூனில் பிறப்பித்த உத்தரவு, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இல்லை, என்றார். இதையடுத்து, மனுதாரர் சங்க உறுப்பினர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்கவும், மூன்று வாரங்களில் அதன் விபரங்களை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும், முதல் அமர்வு அரசுக்கு உத்தரவிட்டது.