கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:02 AM
சென்னை:
கோபாலபுரம், டாக்டர் மோகன் நீரிழிவு மருத்துவமனையில், விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், முதியோருக்கான மருத்துவ ஆராய்ச்சி, மூளை தொடர்பான ஆராய்ச்சிகளை பாராட்டி, இன்போசிஸ் இணை நிறுவனரும், பிரதிக் ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷண் கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டாக்டர் மோகன் பேசியதாவது:
மூளை ஆராய்ச்சியில், கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மேற்கொண்ட ஆராய்ச்சி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மூளை ஆராய்ச்சி மையம் போன்ற அவரது சமூக மேம்பாட்டு திட்டங்கள், நரம்பியல் பிரச்னைகள் உட்பட சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதை பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோபாலா கிருஷ்ணன் பேசியதாவது:
ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பொறுத்தவரை, இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல், ஆராய்ச்சி துறையிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.
மூளை ஆராய்ச்சி மையமானது, மூளை செயல்பாட்டின் பிரச்னைகளை கண்டறிந்து புதுமையான சிகிச்சை முறைகளுக்கு வழி வகுக்கிறது. உயர்தர ஆராய்ச்சியில் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.