பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி கட்டாயம்: சி.பி.எஸ்.இ., உத்தரவு
பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி கட்டாயம்: சி.பி.எஸ்.இ., உத்தரவு
UPDATED : பிப் 23, 2026 03:41 PM
ADDED : பிப் 23, 2026 03:43 PM

சென்னை:
'மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள், ஆண்டுதோறும் மனநல பயிற்சி பெறுவது கட்டாயம்' என, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., பயிற்சி பிரிவின் இயக்குநர் மனோஜ்குமார் ஸ்ரீவாஸ்தவா பிறப்பித்துள்ள உத்தரவு:
அங்கீகரிக்கப்பட்ட மனநல நிபுணர்களால் வழங்கப்படும் மனநல பயிற்சியை, பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும், ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறையாவது பெறுவது கட்டாயம்.
அதில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் கண்டறிவது, உளவியல் சார்ந்து முதலுதவி செய்வது, தற்கொலை எண்ணங்களை தடுப்பது உள்ளிட்ட வழிமுறைகள் கற்பிக்கப்படும்.
அவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு இது குறித்து விளக்கி, மாணவ, மாணவியரின் மனநல பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும்.
மாணவ, மாணவியர், பாடங்கள் சார்ந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவர்களின் விருப்பம் சார்ந்த கலை, விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மேலும், எதிர்கால வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சிகளையும், சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.
மாணவர்களின் மனநலம் சார்ந்த கலந்துரையாடல் விபரங்களை, பதிவேடுகளில் பதிவு செய்து, வழங்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த விபரங்களை ரகசியமாக பராமரித்து, ஆண்டறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

