மாணவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள அமைச்சர் அறிவுரை
மாணவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள அமைச்சர் அறிவுரை
UPDATED : ஜன 31, 2026 11:04 AM
ADDED : ஜன 31, 2026 11:05 AM
கரூர்:
“மாணவர்கள் ஜாதி, மத வேறுபாடு பார்க்காமல், மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,” என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனித நேய நிறைவு நாள் விழா, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கூட்ட அரங்கில், கலெக்டர் தங்க வேல் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், 275 பயனாளிகளுக்கு, 2.38 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:
மனித நேயமானது உணவு பரிமாற்றம், விளையாட்டுகளில் தொடங்கி, பிற மனிதர்களை சமமாக மதித்தல், அவர்களின் உரிமைகளை பேணுதல், அனைவரும் சமம் என எண்ணுதல், தனி மனித சுதந்திரத்தை மதித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது.
மனிதநேய வார விழா போட்டிகளில், பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் ஜாதி, மத வேறுபாடு பார்க்காமல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ., விமல் ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சத்திய பாலகங்காதரன், தாட்டோ மேலாளர் முருகவேல், முதன்மை கல்வி அலுவலர் ராஜூ, துணை ஆட்சியர் (பயிற்சி) கார்த்திகேயன், உள்பட பலர் பங்கேற்றனர்.

