மாணவர்கள், துாய்மை பணியாளர்களுடன் அமைச்சர் ஆனந்த் கலந்துரையாடல்
மாணவர்கள், துாய்மை பணியாளர்களுடன் அமைச்சர் ஆனந்த் கலந்துரையாடல்
UPDATED : ஜூலை 08, 2026 06:26 PM
ADDED : ஜூலை 08, 2026 06:27 PM
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே அமைச்சர் ஆனந்த் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பள்ளி மாணவர்கள், துாய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தொடர்ந்து, மாலையில் காணை ஒன்றியம், வெங்கந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சென்றார்.
விக்சித் பாரத் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்க திட்டத்தின் கீழ் வெங்கந்துார் ஊராட்சியில் இருந்து சாணிமேடு ஓடை வாய்க்கால் வரை பாசனத்திற்கான 13 கி.மீ., துாரத்திற்கு 17.60 லட்சம் ரூபாய் செலவில் கிளை கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, வெங்கந்துார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். பின், மாணவர்களுக்கு சந்தித்து பென்சில், ஸ்கேல், ரப்பர் அடங்கிய எழுது பொருட்களை வழங்கி கலந்துரையாடினார்.
தொடர்ந்து, வீரமூர் பிளாஸ்டிக் கழிவு அரைக்கும் மையத்தில் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த துாய்மைப் பணியாளர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார். துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான கையுறைகள், முகக்கவசம் வழங்கப்படுகிறதா எனவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என கேட்டறிந்தார்.
இதையடுத்து, தென்னமாதேவி கிராமத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்படும் கலைமகள் சுடுமண் சிற்பக்குழுவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அங்கு, சுடுமண்ணால் அழகு சாதனை பொருட்கள் செய்யும் மகளிர் குழுவினரிடம் கலந்துரையாடி, பொம்மைகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கமிஷனர் அமுதவல்லி, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், எம்.எல்.ஏ., சிவக்குமார், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீ ரஷத், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அரிகிருஷ்ணன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
