சட்ட படிப்பு மாணவர் சேர்க்கை துவக்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி
சட்ட படிப்பு மாணவர் சேர்க்கை துவக்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 08:05 AM

சென்னை:
தமிழகம் முழுதும் இயங்கி வரும் சட்டக் கல்லுாரிகளில், இட ஒதுக்கீடு ஆணைப்படி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, அமைச்சர் ரகுபதி நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலுள்ள 23 சட்டக் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீட்டு ஆணையின்படி, அந்தந்த பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் மே 10ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை, பல்கலை இணையம் வாயிலாக பெறப்பட்டன.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதற்கான தரவரிசை பட்டியல், கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தரவரிசையில் முதல் 14 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, சென்னை மற்றும் தமிழகம் முழுதும் உள்ள சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கான ஆணையை அமைச்சர் ரகுபதி நேற்று வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி, பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலை அரங்கில் நடந்தது. இதில், சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டப் பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார், சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

