UPDATED : பிப் 16, 2026 10:50 PM
ADDED : பிப் 16, 2026 10:55 PM

சென்னை:
சிறுபான்மையினர் அந்தஸ்து கோரி விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களில் 88 நிறுவனங்களுக்கு, நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு, சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டை குறிக்கோளாக வைத்து செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, சிறுபான்மையினர் அந்தஸ்து சான்று வழங்க, 2022 டிச., 29ம் தேதியும், மதச்சார்பு சிறுபான்மையினர் நிரந்தர சான்றிதழ் வழங்க, 2024 பிப்., 2ம் தேதியும் அரசாணை வெளியிட்டது.
அதன்படி இது வரை, 370 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், 314 மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், 88 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கு அடையாளமாக, ஐந்து கல்வி நிறுவனங்களுக்கு, தலைமை செயலகத்தில் கடந்த 13ம் தேதி சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருண் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
வணிக வரித்துறை கட்டடங்கள் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சோழிங்கநல்லுார் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 84.42 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் கடந்த 13ம் தேதி திறந்து வைத்தார். இக்கட்டடம், 2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் பத்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதே போல், வணிக வரித்துறை சார்பில், திருச்சியில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டடம், அருப்புக்கோட்டையில் உதவி ஆணையர் அலுவலகம், மன்னார்குடி, நாகப்பட்டினம், கரூர் ஆகிய இடங்களில், மாநில வரி அலுவலக கட்டடம் என, 34.98 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஐந்து வணிக வரித்துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலக கட்டடங்கள்; வண்டலுார், வாணாபுரம், பொங்கலுார் ஆகிய இடங்களில், புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தியாகராஜன், சாமிநாதன், மூர்த்தி, ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

