ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை: புதிய சாதனை படைத்தது நம் ராணுவம்
ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை: புதிய சாதனை படைத்தது நம் ராணுவம்
UPDATED : செப் 26, 2025 09:06 AM
ADDED : செப் 26, 2025 09:13 AM

புதுடில்லி:
ரயிலில் இருந்து, 'அக்னி பிரைம்' ஏவுகணை ஏவும் சோதனையை நம் ராணுவம் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 2,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதிநவீன ராணுவ தளவாடங்களை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. அந்த வகையில் டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய அதிநவீன அடுத்த தலைமுறை அக்னி ஏவுகணைகள், இந்திய ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.
அடுத்த கட்ட முயற்சியாக, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் நடுத்தர வகை, 'அக்னி பிரைம்' ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ளது.
பாராட்டு இதை, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் இருந்து ஏவும் சோதனை நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. அப்போது, திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்தது. இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து, 'அக்னி பிரைம்' ஏவுகணையை உருவாக்கிய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் இந்த ஏவுகணையை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். குறுகிய காலத்திற்குள், எந்த இடத்தில் இருந்தும் ஏவுகணையை செலுத்தி, எதிரிகளின் இலக்கை துல்லியமாக அழிக்க முடியும்.
இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். இதன் மூலம், ரயிலில் இருந்தபடி ஏவுகணை ஏவும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிடம் மட்டுமே ரயிலில் இருந்தபடி ஏவுகணை செலுத்தும் திறன் இருந்தது. இந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
ஆயுத கிடங்கு இதன் மூலம், சாலை வசதி இல்லாத இடங்களில் கூட, ரயில் மூலம், அக்னி ஏவுகணையை எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக போர் சமயங்களில், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதக் கிடங்குகளை எதிரிகள் குறி வைத்து தாக்கக்கூடும்.
அந்த நேரங்களில், ரயில்வே குகைகளில், ஏவுகணைகளை மறைத்து வைத்து, எதிரிகளின் கண்களில் மண்ணை துாவ முடியும். அத்துடன், தக்க சமயத்தில் ரயில் லாஞ்சர் உதவி டன் ஏவுகணையை ஏவி, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்க முடியும் என கூறப்படுகிறது.