'இந்திய செய்தித்தாள் சொசைட்டி'யின் தலைவராக விவேக் குப்தா தேர்வு
'இந்திய செய்தித்தாள் சொசைட்டி'யின் தலைவராக விவேக் குப்தா தேர்வு
UPDATED : செப் 26, 2025 09:05 AM
ADDED : செப் 26, 2025 09:06 AM
புதுடில்லி:
ஐ.என்.எஸ்., எனப்படும் 'இந்திய செய்தித்தாள் சொசைட்டி'யின் தலைவராக, 'சன்மார்க்' ஹிந்தி நாளிதழின் நிர்வாக இயக்குநரும், தலைமை ஆசிரியருமான விவேக் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்திய செய்தித்தாள் சொசைட்டியில், தேசிய அளவில் 800 பத்திரிகைகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. இந்த சொசைட்டியின் 84வது ஆண்டு பொதுக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.
இதில், 2025 - 26ம் ஆண்டுக்கான ஐ.என்.எஸ்., தலைவராக, 'சன்மார்க்' ஹிந்தி நாளிதழின் நிர்வாக இயக்குநரும், தலைமை ஆசிரியருமான விவேக் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக, 'லோக்மத்' மராத்தி நாளிதழின் செயல் இயக்குநர் கரண் ராஜேந்திர தார்தாவும், உதவி தலைவராக, 'அமர் உஜாலா' ஹிந்தி நாளிதழின் இயக்குநர் தன்மயி மஹேஸ்வரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஹிந்தி மாத இதழ், 'க்ருஹஷோபிகா'வின் ஆனந்த்நாத் கவுரவ பொருளாளராகவும், மேரி பால் பொதுச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.என்.எஸ்., சொசைட்டியின் செயற்குழு உறுப்பினர்களாக, 'ஹெல்த் அண்டு தி ஆன்டிசெப்டிக்' இதழின் எல்.ஆதிமூலம், 'தினத்தந்தி' நாளிதழின் பாலசுப்ரமணியன் ஆதித்தன், 'தினகரன்' நாளிதழின் ரமேஷ், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் விவேக் கோயங்கா.
'வனிதா' இதழின் ஹர்ஷா மேத்யூ, 'மலையாள மனோரமா' நாளிதழின் ஜெயந்த் மாமென் மேத்யூ, 'மாத்ருபூமி' நாளிதழின் ஷ்ரேயாம்ஸ் குமார் உள்ளிட்ட 41 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.