உயர்கல்விக்கான ஆலோசனை பெற மொபைல் எண்கள் அறிமுகம்
உயர்கல்விக்கான ஆலோசனை பெற மொபைல் எண்கள் அறிமுகம்
UPDATED : ஜூலை 15, 2026 09:05 PM
ADDED : ஜூலை 15, 2026 09:07 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் 100 சதவீத சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு குறித்தும், கல்வி சான்றிதழ், கல்வி கடன், கல்வி ஊக்கத்தொகை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், மாணவ, மாணவிகள் 100 சதவீத உயர்கல்வியில் சேரும் வகையிலும், இடைநிற்றலை தவிர்த்திட துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உரிய வழிகாட்டுதலுடன் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு, கல்லுாரிகளில் சேர்க்கை நடைபெறும் வரை கண்காணிக்க வேண்டும்.
துணை தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களையும் உயர்கல்வியில் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் 4 மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லுாரியில் 2 மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் 2 மாணவர்களுக்கும் நேரடி சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் 73053 08988 மற்றும் 73584 78988 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
