UPDATED : பிப் 13, 2026 12:36 PM
ADDED : பிப் 13, 2026 12:40 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள சாந்தி பள்ளிகளில், மாதிரி கால்நடை மருத்துவமனை (பெட் கிளினிக்) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி ஜோதிநகர், மகாலிங்கபுரத்தில் உள்ள சாந்தி பள்ளிகள் மற்றும் உடுமலை காந்திநகர் சாந்தி மாண்டிசோரி பள்ளியில், மாதிரி கால்நடை மருத்துவமனை (பெட் கிளினிக்) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள், வீட்டில் இருந்தே செல்லப்பிராணிகளின் பொம்மைகளை கொண்டு வந்தனர்.
அவற்றுக்கு பொதுப் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், ஆரோக்கிய ஆலோசனைகளை, 'கே1' வகுப்பு ஆசிரியர்கள், கால்நடை மருத்துவர்களாக செயல்பட்டு குழந்தைகளுக்கு கற்பித்தனர்.
மேலும், செல்லப்பிராணிகளை சுத்தமாக பராமரிக்கும் விதம், சரியான உணவு அளிக்கும் முறை போன்றவை குறித்து விளக்கினர். குழந்தைகள் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முறை, அவற்றை அக்கறையோடு பார்த்துகக் கொள்ளும் விதத்தை தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியதாக பெற்றோர் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

