என்.எல்.சி., மற்றும் நால்கோ நிறுவனம் இடையே ஒப்பந்தம்
என்.எல்.சி., மற்றும் நால்கோ நிறுவனம் இடையே ஒப்பந்தம்
UPDATED : பிப் 16, 2026 12:46 PM
ADDED : பிப் 16, 2026 12:50 PM

நெய்வேலி:
அனல் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஒத்துழைப்பிற்கு, என்.எல்.சி., மற்றும் நால்கோ நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா நிறுவனம், இந்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி (நால்கோ) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அனல் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது, நேற்று சென்னை, மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், நிதித்துறை இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா, திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா மற்றும் நால்கோ நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் ஜெகதீஷ் அரோரா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
என்.எல்.சி., வணிகப்பிரிவு பொது மேலாளர் முருகன், நால்கோ வணிக மேம்பாட்டு பிரிவின் செயல் இயக்குநர் நாகராஜன் ரவி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நால்கோ நிறுவனத்தின் சுய மற்றும் நீண்ட கால மின்சார தேவைகளை நம்பகமான, செலவு குறைந்த மற்றும் நிலையான முறையில் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள, 1200 மெகாவாட் அனல் மின் உற்பத்தி திட்டம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான முறையான கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.
இந்தக் கூட்டாண்மையானது, மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இது தேசிய வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதையும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், இந்தியாவின் தொழில் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

