தேசிய அறிவியல் விருதுகள் வழங்கினார் முர்மு; தமிழகத்தின் பத்மநாபனுக்கு விஞ்ஞான் ரத்னா
தேசிய அறிவியல் விருதுகள் வழங்கினார் முர்மு; தமிழகத்தின் பத்மநாபனுக்கு விஞ்ஞான் ரத்னா
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:43 PM
புதுடில்லி:
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு, நாட்டின் உயரிய அறிவியல் விருதான விஞ்ஞான் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.
நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் தேசிய அறிவியல் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஐ.ஐ.டி., பேராசிரியர்கள்
இந்த விருதுகள் இனி, ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் என்ற பெயரில் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. ஆண்டுதோறும் 56 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 32 பேருக்கும், ஒரு குழுவுக்கும் சமீபத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல் ராஷ்ட்ரிய விஞ்ஞான் விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு டில்லியில் வழங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விஞ்ஞான் ரத்னா விருது, தமிழகத்தைச் சேர்ந்த 86 வயதான உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தின் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் லஷ்மணன் முத்துசாமி, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் கழக இயக்குனர் அன்னபூரணி சுப்ரமணியம், கேரளாவின் திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர்., இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேருக்கு, விஞ்ஞான் ஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.
இளம் வயதில் அறிவியல், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு, விஞ்ஞான் யுவா - சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது வழங்கப்பட்டது.
இஸ்ரோ
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்களான ராதாகிருஷ்ணன் காண்டி, பிரபு ராஜகோபால், மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியர் மகாலட்சுமி ராதாகிருஷ்ணன், ஹைதராபாத், இந்திய நெல் ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 18 பேர், இந்த விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த விருதை, சந்திரயான் - 3 திட்ட இயக்குநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வீரமுத்துவேல் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் பதக்கமும், ஜனாதிபதி கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கப்பட்டன.
கோவிந்தராஜன் பத்மநாபன்
தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் உயிரி வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். அதே நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருளின் மருத்துவப் பண்புகள் குறித்து, இவரது குழு ஆய்வு மேற்கொண்டது. இவரது பணிகளுக்காக பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையின் வேந்தராக தற்போது உள்ளார்.
லஷ்மணன் முத்துசாமி
இயற்பியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதற்காக விருது வழங்கப்பட்டது. இயற்பியல் மற்றும் உயிரியல், வேதியியல், பொருளாதாரம், சமூகவியல் துறைகளுக்கு இடையே உள்ள பயன்பாடு குறித்து இவர் தன் ஆய்வில் விளக்கியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் காண்டி
சென்னை ஐ.ஐ.டி., எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் காண்டி, தலைமையிலான குழு, 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாக ராணுவ ஒயர்லெஸ் பயன்பாடு, தொலைதுார கிராமங்களுக்கான தொலைதொடர்பு பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கான, ஸ்டோகாஸ்டிக் ஜியோமெட்ரி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது.
பிரபு ராஜகோபால்
சென்னை ஐ.ஐ.டி.,யின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரான பிரபு ராஜகோபால், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள குழாய்களில் விரிசல்களை கண்டறியும் வகையில், நீரில் மூழ்கும் தானியங்கி வாகனங்கள், மீயொலி அலைகள் எனும், அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் ரோபோக்களை கண்டறிந்துள்ளார். இவரின் கண்டுபிடிப்புகள், கழிவுநீர் அடைப்புகளை வெளியேற்றுவது, நில அதிர்வின் உயர் தொழில்நுட்ப படங்களை பெறுவது, எலும்பு சார்ந்த சிகிச்சைக்கு தெளிவான படங்களை எடுக்க உதவும்.
மகாலட்சுமி ராதாகிருஷ்ணன்
உயிரியல் பிரிவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. மைட்டோகாண்ட்ரியல்' சவ்வு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட இவர், நோய்களில் இருந்து காத்துக் கொள்வது தொடர்பான சோதனைகளை நடத்தி உள்ளார்.