மணக்குள விநாயகர் கல்லுாரியில் தேசிய ஏ.ஐ., ஹேக்கத்தான் போட்டி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தேசிய ஏ.ஐ., ஹேக்கத்தான் போட்டி
UPDATED : ஜன 26, 2026 12:17 PM
ADDED : ஜன 26, 2026 12:20 PM

புதுச்சேரி: புதுச்சேரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான 36 மணி நேர தொடர் ஜெனெடிக் ஏ.ஐ., என்ற தலைப்பில் ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
இதில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இருந்து 250 கல்லுாரிகள் மற்றும் 7 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மணக்குள விநாயக கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், வைஷ்ணவி, இணை செயலாளர் வேலாயுதம் பங்கேற்றனர்.
கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். ஹைதராபாத், எட்வைசிலி டெலிபிட் யூனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி நிறுவனர் ஹர்ஷா கண்கனலா, மாணவர்கள் தொழில்நுட்ப திறனை ஆர்வத்துடனும், நெறிமுறைகளுடனும் வளர்த்துக் கொண்டால் ஏ.ஐ., துறையில் சிறந்த வேலை வாய்ப்பினை பெறலாம்' என்றார்.
எதானா டெக்னாலஜி சி.இ.ஓ., செந்தில் ரங்கநாதன், ஜெனெடிக் நுண்ணறிவு தொழிநுட்பத்தில் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருங்காலத்தில் ஏ.ஐ., தொழிநுட்பத்தில் உற்பத்தி, மருத்துவம், இண்டஸ்ட்ரி போன்ற துறைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன' என்றார்.
இப்போட்டியில் மாணவர் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு, ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை தகவல் தொழிநுட்ப துறை தலைவர் ராஜு செய்திருந்தார். அனைத்து துறை டீன்கள் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏ.ஐ., துறை தலைவர் மதுசூதனன் நன்றி கூறினார்.

