இரவுநேர படிப்பு ஞாபக மறதியை ஏற்படுத்தும்: மனநல மருத்துவர்கள்
இரவுநேர படிப்பு ஞாபக மறதியை ஏற்படுத்தும்: மனநல மருத்துவர்கள்
UPDATED : ஜன 16, 2026 09:23 PM
ADDED : ஜன 16, 2026 09:30 PM

கோவை:
பொதுத்தேர்வு நெருங்கும் சூழலில், மாவட்ட மனநல மையம் சார்பில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் செயல்பாடுகள் நடந்துவருகின்றன.
பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இம்மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம், மன அழுத்தம் இச்சமயங்களில் காணப்படுவது இயல்பு. இந்நிலையில், தொடர்ந்து பள்ளிகளின் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட மன நல மையம் சார்பில் இதுவரை, 40 பள்ளிகளில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு இச்சமயத்தில் பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம் என டாக்டர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட மனநலத்திட்ட டாக்டர் ஹெலனா செல்வகொடி கூறியதாவது:
தேர்வு பயம் என்பது, வழக்கமாக நம்மிடம் உள்ள கவனத்தையும் குறைத்துவிடும். இதனால், நாம் திட்டமிட்டாலும் சரியாக படிக்க முடியாமல் போகிவிடும். துாக்கத்தை கெடுத்து பல குழந்தைகள் இரவு நேரங்களை படிக்க தேர்வு செய்கின்றனர்; இது முற்றிலும் தவறு. கட்டாயம், 8 மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் கவனத்தையும், ஞாபக திறனையும் அதிகரிக்க உதவும். இரவு துாங்கும் போது நாம் படித்தவை மூளையில் பதிவாகும்; இதை நடக்கவிடாமல் இரவு கண்விழிப்பதில் பயன் இல்லை.
நாம் என்னதான் படித்தாலும், 45 நிமிடம் மட்டுமே மூளை கிரகிக்கும் தன்மை கொண்டது. இதனால், 45 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் பிரேக் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். தண்ணீர் அதிகம் குடிப்பது, ஊட்டச்சத்து உணவு உண்பதும் அவசியம். தேர்வு முடிவுகளை மனதில் வைத்து படிக்காமல், புரிந்து படித்தால் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். பெற்றோர், தேர்வு முடிவு குறித்து தொடர்ந்து அழுத்தம் தராமல், உரிய ஒத்துழைப்பை தந்து ஊக்குவிக்க வேண்டியது அவசியம். தேர்வு பயம் உள்ள குழந்தைகள், 96556 51411 என்ற ஹெல்ப் லைனில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு பயம் குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் வழங்க தொடர்ந்து பள்ளிகளுக்கு விசிட் செய்கிறோம். கடந்த நான்கு மாதங்களில், 40 பள்ளிகளுக்கு சென்று வழிகாட்டுதல் நிகழ்வு நடத்தியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

