UPDATED : மார் 17, 2026 11:14 AM
ADDED : மார் 17, 2026 11:19 AM

“நவோதயா வித்யாலயா பள்ளி வேண்டாம் என்பதன் வழியே, கிராமப்புற மாணவர்கள் நலனில், கட்சிகள் அரசியல் செய்கின்றன” என, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
மத்திய அரசின், 1986ம் ஆண்டு கல்விக் கொள்கை அடிப்படையில், கிராமப்புற மாணவர்களுக்கு, தரமான கல்வியை உறுதி செய்திட, நாடு முழுதும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி' எனும், உண்டு, உறைவிட மாதிரி பள்ளிகள் துவக்கப்பட்டன.
இந்த பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழி அல்லது மாநில மொழிகள், பயிற்று மொழியாக உள்ளன. அதன்பின், அனைத்து நவோதயா பள்ளிகளிலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்று மொழியாக உள்ளன.
கல்வி கட்டணத்தை பொறுத்தவரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச கல்வி வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதம் 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவியர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டண விலக்கு வழங்கப்படுகிறது.
இந்த பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் துவக்க, அந்தந்த மாநில அரசுகள், நிலம் ஒதுக்கினால் போதும். மத்திய அரசே, கட்டமைப்புகளுக்கான செலவுகளை ஏற்கிறது. எனினும், தமிழகத்தில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க, மாநில அரசு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ, மாநில அரசுக்கு உத்தரவிடகோரி, உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'நவோதயா வித்யாலயா பள்ளி, மும்மொழி கொள்கையால் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருமொழி கொள்கை கடைபிடிக்கப்படுவதால், அந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது' என தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கருத்துக்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாநிலத் தலைவரும், தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலருமான நந்தகுமார்:
இரு மொழிக் கொள்கை என்பதே ஒரு ஏமாற்று வேலை. தமிழகத்தில் உருது, கன்னடம், மலையாளம், அரபு, ஹிந்தி மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது.
பெற்றோர் விருப்பப்படி, மாணவர்கள் படிப்பை, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள், மும்மொழி கடந்து, பல மொழிகள் கற்று வருகின்றனர். ஆனால், ஏழை மாணவர்களின் கல்வி மட்டும் பறிக்கப்படுகிறது. அவர்களின் எதிர்காலத்தை, தமிழக அரசு, கேள்விக்குறியாக்கி உள்ளது.
நாங்கள் டில்லிக்கு சென்றால், ஹிந்தி தெரியாமல் தடுமாறுகிறோம். மற்றவர்களிடம் அவர்கள் பேசுவது என்ன என, கேட்டு தெரிந்து கொள்கிறோம். அதே நேரம், தி.மு.க., எம்.பி., தயாநிதி உட்பட அந்த கட்சியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு, ஹிந்தி நன்றாக தெரிகிறது. மாணவர்கள் பல மொழிகளை கற்க, தமிழக அரசு தடையாக இருப்பது துரோகமாகும்.
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
தமிழக அரசின் இருமொழி கொள்கைக்கு எதிராக இருப்பதால், ஜவஹர் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 'நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே, தமிழகத்தின் கல்வி சிறப்பாக உள்ளது; தமிழக அரசை பொறுத்தவரை, சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க உறுதிப்பூண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மும்மொழிக் கொள்கை; ஏழை கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு, மற்றொரு மொழி கற்கும் வாய்ப்பு மறுப்பு, பணம் படைத்தவர்கள் மட்டுமே, பல மொழி கற்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி தான், நவோதயா பள்ளிகளுக்கான எதிர்ப்பு. இது தான், தி.மு.க., அரசின் சமூக அநீதி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

