UPDATED : ஆக 03, 2024 12:00 AM
ADDED : ஆக 03, 2024 10:16 AM
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான சீருடை வழங்குவதில், தாமதம் ஏற்படுவதால், குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நான்கு செட் சீருடைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், இதுவரை திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடை வழங்கப்படவில்லை. மாநில அளவிலும் இப்பிரச்னை உள்ளது.
ஏற்கனவே சீருடை வைத்திருக்கும் மாணவர்கள், வழக்கம் போல் பள்ளிக்குச்சென்று வருகின்றனர். புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்கள், நடுநிலை பள்ளியிலிருந்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்கு புதியசீருடைகள் வழங்காததால் சிக்கலாகியுள்ளது.
சீருடை இல்லாமல் வண்ண ஆடைகளில் வரும் மாணவர்கள், பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைகளால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.