மாதம் ஒன்று, சம்பவங்கள் இரண்டு! ஐ.ஐ.டி., விடுதியில் திக்திக்...
மாதம் ஒன்று, சம்பவங்கள் இரண்டு! ஐ.ஐ.டி., விடுதியில் திக்திக்...
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:11 PM
கவுகாத்தி:
கவுகாத்தி ஐ.ஐ.டி., கல்வி நிறுவன விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விடுதி அறையில் சடலம்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந் நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருந்த பிம்லேஷ் குமார் என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பி.டெக்., 3ம் ஆண்டு மாணவரான அவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்.
திடீர் போராட்டம்
விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தை கண்டித்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,
நடவடிக்கை
போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவர்களின் மனநிலை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசர அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்தியுள்ளது.
அதே 9ம் தேதி
கடந்த மாதம் 9ம் தேதி இதே கல்வி நிலைய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டெக். மாணவி சவுமியா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். சரியாக ஒரு மாதம் கழித்து அதே 9ம் தேதியில் மற்றொரு மாணவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்விச்சுமை
மாணவர்களின் இத்தகைய முடிவுகளுக்கு கல்விச்சுமையே காரணம் என்று கூறப்பட்டாலும், அவர்களின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.