4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் வெறும் 5 பேராசிரியர்கள்
4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் வெறும் 5 பேராசிரியர்கள்
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:27 PM

சென்னை:
தமிழகத்தில் உள்ள நான்கு அரசு மருந்தியல் கல்லுாரிகளில், 27 பேராசிரியர்கள் பணியிடங்களில், 22 இடங்கள் காலியாக இருப்பதால், பி.பார்ம்., டி.பார்ம்., படிப்புக்கான இடங்களை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளின் கட்டுப்பாட்டில், மருந்தியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில், பி.பார்ம்., டி.பார்ம்., எம்.பார்ம்., போன்ற மருந்தாளுனர் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மருந்தியல் கல்லுாரிகளில், மொத்தமுள்ள ஒன்பது பேராசிரியர் பணியிடங்களில், ஆறு இடங்கள் காலியாக உள்ளன.
இணைப் பேராசிரியருக்கான, 18 பணியிடங்களில், 16 இடங்கள் காலி. உதவிப்பேராசிரியர்கள், 51 பேர் உதவியுடன் தான் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இதன் காரணமாக, தனியார் மருந்தியல் மருத்துவ கல்லுாரிகளை போல, அரசு மருந்தியல் கல்லுாரிகளில் இடங்களை அதிகரிக்க முடிவதில்லை என, மருந்தியல் பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அரசு மருந்தியல் பேராசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 100 தனியார் மருந்தியல் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 8,500க்கும் மேற்பட்ட பி.பார்ம்., டி.பார்ம்., எம்.பார்ம்., பி.ஹெச்.டி., பார்ம் டி., படிப்புகள் உள்ளன. அதேநேரம், 36 அரசு மருத்துவ கல்லுாரிகள் இருந்தாலும், நான்கு மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே மருந்தியல் பிரிவுகள் உள்ளன.
அவற்றிலும், 26 பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களில், ஐந்து பேர் மட்டுமே பணியில் உள்ளனர். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மருந்தியல் இடங்களை அதிகரிக்க முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு முதல் ஐந்து தனியார் மருந்தியல் கல்லுாரிகள் வருகின்றன. ஆனால், 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மருந்தியல் கல்லுாரியை கூட அரசு ஏற்படுத்தவில்லை. இதனால், பெரும்பாலான மாணவர்கள், தனியார் மருந்தியல் கல்லுாரியில், ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படிக்க வேண்டியுள்ளது.