ப வடிவில் மாணவர்கள் இருக்கை சாத்தியமில்லை என கைவிரிப்பு
ப வடிவில் மாணவர்கள் இருக்கை சாத்தியமில்லை என கைவிரிப்பு
UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 08:46 AM

பொள்ளாச்சி:
பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் ப வடிவில் அமைப்பதற்கு சாத்தியமில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வழக்கமாக மாணவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்படுவர். படிப்பில் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்படுகின்றனர். இத்தகைய வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.
இதை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படுவதை கேரளாவில் திரைப்படம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் 8 பள்ளிகளில், இதுபோன்ற முறை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளில், இந்த நடைமுறையை பின்பற்ற பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதன் வாயிலாக மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கவனிக்க முடிவதுடன், கலந்துரையாடலையும் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருக்கைகளை 'ப' வடிவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தோல்வியில் முடிந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி கிடையாது. இதுமட்டுமின்றி, 'ப' வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்த முடியும்.
ஆனால், கரும்பலகையில் ஏதேனும் ஒரு பாடத்தை சுட்டிக் காட்டி எழுதும் போது, ஓரமாக அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கழுத்து வலி, பார்வைகோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதனால், வகுப்பறையில் ப வடிவில் மாணவர்கள் இருக்கைகளை அமைப்பது, சாத்தியமாகாது. அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு, கூறினர்.