UPDATED : மார் 08, 2026 12:02 PM
ADDED : மார் 08, 2026 12:35 PM
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, 70க்கும் மேற்பட்ட பெண் ஓவியர்கள் பங்கேற்றுள்ள இரண்டு நாள் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நேற்று துவங்கியது.
இதில், பல்வேறு கருப்பொருளில், நம் கண்முன்னே ஓவியங்கள் வரைகின்றனர்.
இது குறித்து, ஒருங்கிணைப்பாளர் சரண்யா கூறியதாவது:
பெண்கள் ஒன்று கூடி, ஓவிய கலை வாயிலாக, அவர்களின் தனித்திறமைகளை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஓவிய கலைஞர்களான சத்யா, காயத்ரியுடன் நானும் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்.
பெண் ஓவியர்களுக்கான நேரடி ஓவியம் வரைதல் நிகழ்ச்சிகள், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே நடக்கின்றன; சென்னையில் அரிது.
எங்கள் முயற்சிக்கு, எழும்பூர் அருங்காட்சியக நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கலைஞர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் மருத்துவர், இன்ஜினியர் உட்பட பெண்கள் பங்கேற்று, 'அக்ரிலிக், சார்கோல், எண்ணெய் ஓவியம்' உட்பட பல வகை ஓவியங்களை வரைந்துள்ளனர்.
இந்த ஓவிய கண்காட்சியை, இன்று மாலை 06:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்; அனுமதி இலவசம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒற்றை பெற்றோரின் வலி
எங்கள் வீட்டில் என்னுடன் சேர்த்து மூன்று பெண் குழந்தைகள். ஒற்றை பெற்றோரான அம்மா தான் வளர்க்கிறார். ஒற்றை பெற்றோரின் போராட்டமான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் கருப்பொருளை மையமாக வைத்து, இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன். என் அனுபவத்தில், ஒற்றை பெற்றோர் சந்திக்கும் தடைகளை படிக்கற்களாகவும், தன் குடும்பத்தை காக்க, மெழுகு வர்த்தியை போல் எரிவதாகவும் இதில் காண்பித்துள்ளேன்.
- ஓவியக் கலைஞர் அனிஷா, நுங்கம்பாக்கம், சென்னை.

