கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மூன்றாவது தளம் திறக்க அனுமதி
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மூன்றாவது தளம் திறக்க அனுமதி
UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM
ADDED : ஜூன் 21, 2024 09:35 AM

சென்னை:
விசாரணைக்காக மூடப்பட்ட, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் மூன்றாவது தளத்தை திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்; 2022 ஜூலையில் சம்பவம் நடந்தது. அதைத்தொடர்ந்து, பள்ளிக்குள் புகுந்த கும்பல், வன்முறையில் இறங்கி சேதப்படுத்தியது; பள்ளி மூடப்பட்டது.
பள்ளியை திறக்க அனுமதி கோரி, நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட பள்ளியின், ஏ பிளாக் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் மாடி பகுதிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளை பயன்படுத்திக் கொள்ள, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில், வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது.
நிர்வாகம் சார்பில், வழக்கறிஞர் சாம்ராட் ஆஜராகி, சம்பவம் தொடர்பாக விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, சீல் வைக்கப்பட்ட மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
உரிய அனுமதி பெறாமல் மூன்றாவது தளம் கட்டப்பட்டுள்ளதால், அதை திறக்க அனுமதிக்கக் கூடாது என பள்ளி கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தால், நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்த நீதிபதி, மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.