தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பகுதி நேர ஆசிரியர்கள் மனு
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பகுதி நேர ஆசிரியர்கள் மனு
UPDATED : நவ 16, 2024 12:00 AM
ADDED : நவ 16, 2024 10:36 AM
திருப்பூர்:
தேர்தல் வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில்,பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் கவுதமன் தலைமையில் திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள், கலெக்டரிடம் அளித்த மனு:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் வகையில், மாதம் 12,500 ரூபாய் என்கிற குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்கிற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அந்த வாக்குறுதியை நம்பி நாங்கள் காத்திருந்தோம்.
ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகியும், பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தேர்தல் வாக்குறுதிப்படி, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில், வரும் டிச., 10ம் தேதி, 10 ஆயிரம் பேர் திரண்டு, சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்